Press "Enter" to skip to content

நெருக்கடிகளில் இருந்து இலங்கையர்களாகிய நாம் விரைவில் மீண்டெழுவோம்!

பொறுமையும் நம்பிக்கையும் அவசியமான பொழுதொன்றில் புலரும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைவரின் இடர்களையும, துயர்களையும் போக்குகின்ற ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்” இவ்வாறு பிறக்கும் தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கௌரவ டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தேசிய நல்லிணக்கத்தின் பண்டிகையாக தமிழ் சிங்கள மக்களால் கொண்டாடப்படும் சித்திரைப் பண்டிகையின் கொண்டாட்டமானது எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளோடும், பொருள் தட்டுப்பாடுகளுடனும் கொண்டாட வேண்டியதொரு சூழலில் எமது நாட்டின் தற்போதைய நிலைமை உள்ளது.

கொரோனா தொற்று, அந்நிய செலவாணியை இழப்பு எனப் பல காரணங்கள் இருந்தாலும் இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டெழுவோம் என்ற நம்பிக்கை கொள்ளவேண்டும்.

மக்களின் பிரச்சனைகளில் குளிர் காயவும் அவற்றை தீராப்பிரச்சனைகளாக கையாளவும் சில சுயலாப அரசியல்வாதிகள் முயற்சிப்பார்கள். அவர்களின் நோக்கமானது “எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்” என்பதாகவே இருக்கமுடியும்.

மக்களை நேசிக்கும் எமது நோக்கமோ, நடைமுறை யதார்த்தத்தின் வழி நின்று நாட்டையும் மக்களையும் பாதுகாத்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி வழி நடத்தும் பணியானது எத்தகைய கடினமானதாக இருந்தாலும் பிரச்சனைகளை தீர்க்கும் எமது அரசியல் கையாளுகையை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதேயாகும்.

தற்போதைய நெருக்கடிகள் தீரும். எரிபொருளுக்காகவும் எரிவாயுவிற்காகவும் பல மணிநேரங்கள் வரிசையில் காத்திருக்கும் காலம் விரைவில் மாறும் – இலங்கை மக்களின் வாழ்வு வளம்பெறும் என்ற நம்பிக்கையுடன் எமது அரசின் முயற்சிகள் அமைந்துள்ளது என்பதை இந்நன்நாளில் உங்களுக்கு கூறிவைக்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *