நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பலருக்கு இதய நோய்! : இதய நோய் நிபுணர் கோத்தபாய ரணசிங்க
By admin on April 25, 2022
நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார அழுத்தத்தை பலரால் சமாளிக்க முடியாமல் இதய நோய்கள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பலர் தங்கள் அன்றாட வழமைக்கு மாறாக கடுமையான வெயிலில் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது, சில சமயங்களில் வெறுங்கையுடன் முடிவடைகிறது. மேலும் பொருட்களின் அதிக விலையுடன் ஒப்பிடும்போது கையில் பணமின்மையும் மன அழுத்தம் அதிகரிப்புக்கு காரணமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதிகரித்த மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சீனி உட்பட ஏனைய தொற்று அல்லாத நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது திடீர் மாரடைப்புக்கான சிறியளவிலான மருந்துகள் உள்ளதாகவும், ஆனால் எதிர்காலத்தில் அந்த அளவு தீர்ந்துவிட்டால் வைத்தியசாலை ஊழியர்களும் நோயாளர்களும் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் எனவும் மருத்துவர் ரணசிங்க வலியுறுத்துகின்றார்.
Be First to Comment