பொது எதிர்ப்பு நடவடிக்கைகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன -நாலக கொடஹேவா
By admin on May 3, 2022
அமைதியான போராட்டங்களில் ஈடுபடும் இளைஞர்கள் மூன்றாம் தரப்பினரால் கையாளப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைதியான பொதுப் போராட்டங்களை தனிப்பட்ட இலாபங்களுக்காகப் பயன்படுத்த சில குழுக்கள் முயற்சிப்பதை அரசாங்கம் அவதானித்துள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரான நாலக கொடஹேவா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலையின் கண் கட்டப்பட்டமை தொடர்பில் வெளிநாட்டு நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
சிலையை அகற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவி வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயக ரீதியில் அரசாங்கம் இதுவரை போராட்டங்களை நடத்த அனுமதித்துள்ளது.
அமைதி வழியில் நடைபெறும் போராட்டங்களை பலத்தை பயன்படுத்தி அடக்கும் எண்ணம் அரச தலைவருக்கு இல்லை என்றும், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத வரையில் போராட்டங்கள் தடைப்படாது என்பது ஜனாதிபதியின் கருத்து என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment