Press "Enter" to skip to content

வவுனியா விபத்தில் இளைஞன் பலி!

வவுனியா, ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (04) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து ஏ9 வீதியூடாக நொச்சிமோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஏ9 வீதியில் வவுனியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் எதிர்ப்பக்கம் சென்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த சாந்தசோலை மகளிர் அமைப்புக்கு சொந்தமான கட்டடத்திற்குள் புகுந்தது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தின் போது புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த சாந்தசோலை மகளிர் அமைப்புக்கு சொந்தமான கடை சேதமடைந்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்தில் வாகனச் சாரதிக்கும் இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டு விபத்துக்குள்ளான வாகனம் கொண்டு செல்லப்பட்டதுடன், வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *