பொன்.சிவகுமாரனின் 48 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இதை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் தியாகி சிவகுமாரனின் சகோதரி உருவச் சிலை முன்பாக ஈகைச் சுடரினை ஏற்றிவைத்ததை தொடர்ந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமரரின் உருவச் சிலைக்கு பலர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தனர்.
அஞ்சலி மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கூறுகையில் –
சமத்துவத்துடன் சம உரிமையுடன் இந்நாட்டில் நாம் அனைவரும் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தியவர்களில் ஒருவர் அமரர் பொன் சிவகுரானாவார்.
ஆனால் அவரது ஆரம்பகால போராட்டத்தின் பின்னர் பல அரசியல் கட்சிகள் உருவாகி பல கருத்துக்களை முன்னெடுத்திருந்தாலும் அவரது இலக்கு நோக்கி நாம் அனைவரும் நகருகின்றோமா என்பதை அனைத்து தரப்பினரும் சிந்திக்க வேண்டும்.
அந்தவகையில் அவரது நோக்கம் நிறைவேற இந்த நாளில் நாம் அனைவரும் கட்சி போதங்கள் இல்லாது ஒருமித்து பயணிப்பது அவசியமாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
முன்பதாக 1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் நாள் தமிழர் தாயகத்தில் சிங்கள அரசின் கொடுமையை எதிர்த்து தமிழ் மாணவர் சமுதாயம் வரலாறு காணாத ஊர்வலத்தை நடத்தியது. இதை முன்னின்று நடத்தியவர்களில் பொன். சிவகுமாரனும் ஒருவர்.
இதனால் சிவகுமாரன் மாணவ சமூகத்தினதும் தமிழ் மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றார். சிவகுமார் தலைமையில் தமிழ் இளைஞர்கள் திரண்டனர்.
இதையடுத்து இராணுவத்தினரது சுற்றிவளைப்பின் போது போராளிக்குரிய உறுதியோடும், கட்டுப்பாடோடும் முதன்முதலாக சயனைட் அருந்தி தன் உயிரைத் துறந்தவர் பொன்.சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment