வவுனியாவில் எரிபொருள் கோரி பொதுமக்கள் வீதியை வழிமறித்தமையால் பதற்றநிலை ஏற்பட்டது.
வவுனியாவில் இன்று புதன்கிழமை காலை அனேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்னார் வீதி சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக காலை 6 மணிமுதல் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் பொதுமக்கள் கூடிநின்றனர். எனினும் பிற்பகல் 3 மணியாகியும் பெற்றோல் வழங்கப்படவில்லை.
இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் ஏ-9 வீதி மற்றும், மன்னார் வீதி ஆகியவற்றை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த வீதிகளூடனான போக்குவரத்து ஒருமணிநேரம் முழுமையாக ஸ்தம்பித்ததுடன், பதற்றமான சூழலும் ஏற்பட்டிருந்தது.
சம்பவ இடத்துக்கு வருகைதந்த வவுனியா பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுற்பட்டனர். இதன்போது பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.
பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இருப்பை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களால் கோரப்பட்டது. இதனையடுத்து பொலிஸாரால் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் இருப்பு கண்காணிக்கப்பட்டது.
எனினும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இருப்பு அற்ற நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சற்று நேரத்தில் கலைந்து சென்றனர்.
Be First to Comment