நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டால் இந்த வாரம் கல்வி செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, புலமைப்பரிசில் மற்றும் சாதாரண தர பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை, ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒக்ரோபர் அல்லது நவம்பரில் நடத்துவதற்கும் , டிசெம்பரில் இடம்பெற வேண்டிய கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை 2023 பெப்ரவரியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி பாடசாலை கற்றல் செயல்பாடுகளை தொடர்ந்தும் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
200இற்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளில் போக்குவரத்து சிக்கல் மிகக் குறைவாகும். எனவே அவ்வாறான பாடசாலைகளை நடத்திச் செல்வதில் சிக்கல் ஏற்படாது. எனினும், நகர்புற பாடசாலைகளில் அவ்வாறான நிலைமை இல்லை. எனவே, அவற்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக இணையவழி கற்பித்தலை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு இணையவழி கற்பித்தலை முன்னெடுப்பதைக் கருத்தில் கொண்டு இவ்வாரம் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாதிருக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு, பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்த மீளாய்வு மீண்டும் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன்போது குறித்த வாரத்தில் கல்வி செயல்பாடுகள் இடம்பெற்ற முறைமை தொடர்பில் அறிக்கைகள் பெறப்பட்டு அவை மதிப்பீடு செய்யப்பட்டு அடுத்த வாரம் குறித்து தீர்மானிக்கப்படும்.
அத்துடன், கல்விக்காக கோவிட் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி சேவைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் மற்றும் டிசெம்பரில் வழங்கப்படும் தவணை விடுமுறையை மட்டுப்படுத்தி பாடசாலைகளை நடத்தி பாடப்பரப்புக்களை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கோவிட் காலத்திலிருந்து தரம் 1 முதல் 5 வரையான ஆரம்ப பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாணவர்கள் தொடர்பில் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
பாடநூல்கள் உள்ளிட்ட கல்வித்துறை சார் அச்சுக்கு தேவையான காகிதங்கள் அல்லது கடதாசிகள் இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன. அடுத்த வருடத்துக்கான சீருடையில் ஒரு தொகுதியை வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து கல்வி செயல்பாடுகளை வழமை போன்று முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.
மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் என்பவற்றை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பான உயர் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும். இந்தவாரம் பாடசாலைகள் மூடப்படும் வாரமாகவே கருதப்படும். எனவே, ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை எனில் அது அவர்களது விடுமுறையாகக் கருதப்பட மாட்டாது – என்றார்
Be First to Comment