Press "Enter" to skip to content

நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல்

இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

எதிர்வரும் மாதம் 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையில்தான் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நான் கூறிவருவது போன்று இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதன் ஊடாக வடக்கு மாகாணம் அதற்கு மேலாக வடமத்திய மாகாணம் நன்மையை பெறும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றி வருவது தொடர்பில் அமைச்சரவையில் ஆதரவு கிடைத்துள்ளதா என ஊடகவியலாளர் வினவினார். பதிலளித்த அமைச்சர் கூறுகையில்

அதில் எவ்விதமான தடையும் இல்லை. கடைசியாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவை என்று கூறப்பட்டது. அதுவும் பெறப்பட்டுள்ளது.

ஆனால், நாணய மாற்று விடயத்தில் மாத்திரமே இழுபறி நிலை காணப்படுகின்றது. அதனை சீர்செய்வோமாக இருந்தால் எந்த நேரத்திலும் சரிவரும். அதற்காக படகுகள் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *