பொதுஜன பெரமுன மீதும், மகிந்த ராஜபக்ஷ மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துளியவும் குறைவடையவில்லை. எனவே, நாம் தேர்தலைக் கண்டு பின்வாங்கப் போவதில்லை.
எந்தத் தேர்தலானாலும் அதில் நாமே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அண்மையில் கட்சி செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதியின் பின்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் அதிகாரம் தமக்குரியதாகும் என்று ஆணைக்குழு அறிவித்தது. இது சட்ட ரீதியான விடயமாகும்.
இது இவ்வாறிருக்க நாட்டில் பொதுஜன பெரமுனவே இன்றும் செல்வாக்குள்ள கட்சியாக காணப்படுகிறது என்று நாம் நம்புகின்றோம்.
பொதுஜன பெரமுனவின் மீதும், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துளியளவும் குறைவடையவில்லை. எனவே, நாம் தேர்தலைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. பொதுஜன பெரமுன அவ்வாறான கட்சி அல்ல.
எமது கட்சிக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியிலும், பிரிதொரு தரப்பினர் சுயாதீனமாகவும் செயல்படத் தொடங்கினர். இவர்களே மகிந்த ராஜபக்ஷவை பதவி நீக்குமாறு கோரினர். மொட்டுசின்னத்தில் பொதுஜன அபரமுன சார்பில் போட்டியிட்ட எவருக்கும் அவ்வாறு கோரும் உரிமை கிடையாது.
எவ்வாறிருப்பினும் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் குறைவடையவில்லை. கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு மக்கள் பதிலளிப்பர். எந்தத் தேர்தலானாலும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் பலம் எமக்கிருக்கிறது. மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் அவரின் வழிகாட்டலின் கீழ் நாம் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெருவோம். அவரையே மக்கள் முழுமையாக நம்புகின்றனர் – என்றார்





Be First to Comment