சீனாவின் போலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5, இன்று துறைமுகத்தை வந்தடையாது என்று ஹம்பாந்தோட்டை துறைமுக அதிபர் தெரிவித்துள்ளார்.
தனது அனுமதியின்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் எந்த கப்பலும் பிரவேசிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் போலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 வருவதை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், சீனாவிடம் இருந்து எந்த பதிலும் இது தொடர்பில் வெளியாகவில்லை.
யுவான் வாங் 5 ஜூலை 14 ஆம் திகதி அதன் சீனத் துறைமுகத்தை விட்டு ஹம்பாந்தோட்டையை நோக்கி புறப்பட்டது.
இதன்படி இந்த கப்பல் சுமார் 28 நாட்கள் பயணிக்கிறது.
இந்திய அதிகாரிகள், யுவான் வாங் 5 வருகைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
நேற்று புதன்கிழமையன்று, யுவான் வாங் 5 கப்பல், அதன் போக்கிலிருந்து இலங்கைக்கு நகர்வதாகக் காட்டியது.
இன்று மாலை நிலவரப்படி, இலங்கைக் கடலில் ஹம்பாந்தோட்டை தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 600 கடல் மைல் தொலைவில் கப்பல் தரித்துள்ளது.
இந்த கப்பல் தற்போது இலங்கையின் கிழக்கே வங்காள விரிகுடாவை நோக்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இந்த கப்பல் ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படும் என்று இலங்கை வாய்மொழி மூலம் சீன தூதரகத்துக்கு தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எனினும் இதற்கும் சீன தூதரகத்திடம் இருந்து எந்த கருத்துக்களும் இதுவரை இல்லை.
இதேவேளை சீனாவில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தானின் போர்க்கப்பல் ஒன்று நாளைய தினம் கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது
இந்த கப்பல் ஆகஸ்ட் 15 வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Be First to Comment