யாழ்.மாநகரசபை எல்லைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டில் அனுமதியில்லாமல் மதில் கட்டப்படுவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டியதற்கமைய கட்டுமான பணிகளை உடன் நிறுத்தும்படி முதல்வர் வி.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நல்லூர் குறுக்கு வீதி பகுதியில் புதிதாக வீடொன்றை நிர்மணித்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டு மதில் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. எனினும், இதற்கான அனுமதி யாழ் மாநகர சபையில் பெறப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.மாநகரசபை அமர்வு நேற்று நடந்த போது, கஜேந்திர குமாரின் மதில் விவகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த் எழுப்பினார். அத்துடன் ‘உங்கள் கட்சியின் தலைவர் என்பதால் அவர் அனுமதியின்றி மதில் கட்டுவதைஅனுமதித்துள்ளீர்களா?’ என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை பார்த்துகேள்வியெழுப்பினார்.
எனக்கு இப்பொழுதும் அவர்தான்கட்சித்தலைவர். என்றாலும் அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது. அதனால் அந்த கட்டுமான பணிகளை உடனடியாக இடைநிறுத்துவதுடன்,முறைப்படியான அனுமதி பெற்றுகட்டுமானத்தை தொடரும்படி அறிவியுங்கள் என மாநகரசபை உத்தியோகத்தர்களிற்கு முதல்வர் மணிவண்ணன் உத்தரவிட்டார்
Be First to Comment