தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,
சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக நீதியமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துதல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு தொடர்பில் எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான ஒன்றாக இருக்கும்.
எனவே அதற்கமைவாக குறித்த அறிக்கைக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக சீ.வி. விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.





Be First to Comment