பழைய தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொண்டால் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என்பதை அரசியல் கட்சிகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
உள்ளுராட்சிமன்ற தேர்தல் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தால் பொது தேர்தலை நடத்த தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் 18 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் நிலையான அரசாங்கம் நாட்டில் காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
பொதுத்தேர்தலை விரைவில் நடத்துமாறு பலர் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.9ஆவது பாராளுமன்றத்தின் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்திற்கமைய தற்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் இரண்டரை வருடத்தை பூர்த்தி செய்ததன் பின்னரே ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும்.
அதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதியால் பாரளுமன்றத்தை கலைக்க முடியும்.
பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்தால் அனைவரது எதிர்பார்ப்பிற்கமைய பொதுத்தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவுள்ளது.தேர்தல்களை பிற்போடும் நோக்கம் ஆணைக்குழுவிற்கு கிடையாது.
தேர்தல் திருத்த முறைமையில் காணப்படும் சட்ட சிக்கல் காரணமாக மாகாண சபை தேர்தல் பல ஆண்டுகாலமாக வரையறையற்ற வகையில் பிற்போடப்பட்டுள்ளது.
பழைய தேர்தல் முறைமையில் ஒரு சில திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபை தேர்தலை நடத்தும்; சூழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறு அரசியல் கட்சிகளிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
உள்ளுராட்சிமன்ற சபை தேர்தலும் பிற்போடப்பட்டுள்ளது.உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்தல்,பிற்போடல் தொடர்பான அதிகாரத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு தேர்தல்கள் திருத்த முறைமை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவிடம் பரிந்துரைத்துள்ளோம்.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரினால் சரியான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டாலும்,பெரும்பாலான தரப்பினரால் அது அரசியல் நோக்கத்திலான தீர்மானம் என்றே கருதப்படும்.
ஆகவே தேர்தல் தொடர்பிலான முழு அதிகாரத்தையும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு குறிப்பிட்டுள்ளோம்.
எதிர்வரும் மாதம் 20ஆ;ம் திகதிக்கு பின்னர் உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழு வசமாகும்.
அதற்கமைய உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் உறுதியான தீர்மானம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும். உள்ளுராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரிமாதத்தி;ன் இறுதி வாரத்தில் அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என்றார்
Be First to Comment