கொழும்பில் நேற்றையதினம் (18-08-2022) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலியை தடுத்து வைத்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் அவர் உட்பட சந்தேகநபர்கள் மூவரையும் தடுத்து வைத்து விசாரிக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்றைய தினம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமிக்கும் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 16 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் உட்பட மூவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், அவர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Be First to Comment