Press "Enter" to skip to content

பந்து எங்களிடம் இல்லை! இலங்கையை நோக்கி பந்தை திருப்பியடித்துள்ள சீனா

சீனாவிடம் பெற்ற கடன்களை மறுசீரமைக்க கோரும் இலங்கைக்கு, சீனா வழங்கியுள்ள புதிய பதில் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்துடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கையின் பதில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பந்து இலங்கையிடமே என்று சீனா கூறியுள்ளதாக இன்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு செல்ல வேண்டும் எனில், சீனாவிடம் பெற்ற கடன்களை மறுசீரமைப்புக்கு உட்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இதனை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.

இதற்கு பதிலளித்திருந்த இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்ட பின்னர், சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு (ஹெயார்கட்-முடிவெட்டுதல்) பேச்சுக்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.

அத்துடன் இலங்கை, சீனாவிடம் பெற்ற கடன் தொடர்பில் சீனா வியத்தகு முடிவை எடுக்க வேண்டும் என்று அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

இந்தநிலையில்; ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள சீன தூதரக பேச்சாளர் ஒருவர், சீன வங்கிகளுடனான கடன் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னரே இலங்கை நிதியமைச்சகத்திடம் சீனா தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விவாதிக்க, தமது வங்கிகளை ஊக்குவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சீனப் பிரதமர் லீ கெகியாங் மற்றும் அப்போதைய இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதும் சீன நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் நிதி அமைச்சுக்கும் பரிந்துரைகளை அனுப்பப்பட்டன.

எனினும் இலங்கையின் நிதியமைச்சிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

எனவே பந்து இலங்கையிடமே தற்போது உள்ளது என்று சீன தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மொத்த இருதரப்புக் கடன் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 6.2 பில்லியன் டொலர்களாக சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பான் மற்றும் சீனா ஆகியன இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கியுள்ளன.

இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கு இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

அத்துடன் இந்த ஆண்டு கடன் மற்றும் பரிமாற்றங்கள்  மூலம். இலங்கையில் 14 பில்லியன் டொலர் சர்வதேச இறையாண்மை பத்திரக் கடனுக்கும் உள்ளாகியுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *