உள்ளுராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடம்கொடுக்காமல் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்பாட்டுடனும்,முறையான நிர்வாக அமைப்புடனும் செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த கடிதத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோ. கருணாகரம், இலங்கை தமிழ்த் அரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் இக்கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வல்வெட்டித்துறை நகர சபையில் கடந்த முறை நகர சபையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினரின் மரணத்தினாலே ஒரு உறுப்பினருக்கான வெற்றிடம் ஏற்பட்டது.
அந்த இடத்தை நிரப்புகின்ற தார்மீக உரிமை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கே இருந்தமையை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
நகரசபை உறுப்பினர் பதவி
மேற்படி வெற்றிடத்திற்கு தங்கள் கட்சியால் தொடர்ச்சியான கோரிக்கை முன் வைத்ததன் அடிப்படையில் தங்கள் கட்சி உறுப்பினர் மயூரன் அவர்களுக்கு நகரசபை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வல்வெட்டித்து நகரசபை தவிசாளர் பதவி ரெலோவுக்கே ஒதுக்கப்பட்டிருந்தது.
ரெலோவின் தவிசாளராக இருந்த கருணானந்தராஜா மரணித்த பின்னர் தவிசாளர் தெரிவுகளில் குழப்பங்கள் ஏற்பட்டது.
கடந்த மாதம் 23ஆம் நடந்து முடிந்த வல்வெட்டித் துறை நகர சபைத் தவிசாளர் தெரிவிலே, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் பிரேரிக்கப்பட்டவருக்கே வெற்றி வாய்ப்பு உறுதியாகி இருந்த நிலையில் தங்களால் நியமனம் செய்யப்பட்டது.
மேற்குறிப்பிட்ட நபர், தவிசாளர் தெரிவில் வாக்களிப்பிற்கு சமூகம் கொடுக்காதலால் எமது கட்சி ஒரு வாக்கினாலே வெற்றி வாய்ப்பை தவறவிட்டமை மிகவும் வேதனையான விடயம்.
கட்சியின் கோரிக்கை
ஆகையால், தங்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே அவருக்கு எமது கட்சி சார்பில் பதவி வழங்கப்பட்டது என்பதை நினைவுறுத்தி உடனடியாக நடைமுறைக்கு வரும் வண்ணம்,
1. அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை தாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும்
2. அவருடைய பதவி நிலையை வறிதாக்கி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டுமென்றும்
எமது கட்சியால் கோரிக்கை முன் வைக்கிறோம்.
எதிர்காலத்தில் கூட்டமைப்பு, கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று எமது கட்சி வழமை போன்று கருதுகின்றது.
உடனடி தீர்மானமெடுக்க நடவடிக்கை ஏனைய பல உள்ளுராட்சி மன்றங்களிலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் கூட்டமைப்பு முடிவுகளுக்கு கட்டுப்பட்டே எமது கட்சி உறுப்பினர்களும் தங்களது கட்சியோடு ஒன்றிணைந்து இன்று வரை செயற்பட்டு வருகிறார்கள் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
கடந்த நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றதை நினைவுபடுத்த விரும்புகிறோம். எதிர்காலங்களில் இந்த ஒழுங்குமுறை சீர்குலையாமல் இருப்பதற்கு உடனடியாக இந்த நடவடிக்கையை நீங்கள் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இதேவேளை விரைவில் தங்கள் பதிலையும் நடவடிக்கையும் எதிர்பார்க்கிறோம்”என குறிப்பிடப்பட்டுள்ளது.
Be First to Comment