Press "Enter" to skip to content

பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மீட்டுத் தருமாறு அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

சட்டவிரோதமாக படகுகளின் மூலம் வெளிநாட்டிற்குப் போக முயற்சித்த நிலையில், இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்தித்து தமது உறவினர்களின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

சுமார் 68 பேர் சட்ட விரோத பயணத்தை மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாம் மற்றும் பெங்களூர் மத்திய சிறைச்சாலை ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 பேரும் கடந்த 13 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை

முல்லைத்தீவுக்கு சென்டறிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் தமது பூர்வீக  வயல் நிலங்களுக்கு சிலர் தவறான முறையில் உரிமம் பெற்று விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தமது பூர்வீக நிலங்களை தமக்கு மீட்டுத்தர வேண்டும் என்பதுடன் தமது பிரதேசத்தில் தாம் எதிர்கொள்ளும் பிரைச்சினைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள்  கோரிக்கை முன்வைத்தனர்.

குறித்த சந்திப்பு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இச் சந்தர்ப்பத்தில் பிரதேச செயலர் ஜெயகாந்தன் பிரதேசத்தின் கிராம சேவையாளர் ஆகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்த்க்கது.

இதேவேளை

வவுனிக்குளம் கிராமத்தில் கடந்த கால இடம்பெயர்வுகள் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் பாழடைந்துள்ள மீன் குஞ்சு உற்பத்தி தொட்டிகளை புனரமைத்து பிரதேச மக்களுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கிலான கள விஜயம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மேற்கொண்டார்.

இத்திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், வவுனிக்குளத்தில் மீன் பிடிப்பதை ஜீவனோபாயத் தொழிலாக கொண்ட சுமார் 120 குடும்பங்களுக்கு மேலதிக வருமானத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் உள்ள குளங்களுக்கு தேவையான மீன் குஞ்சுகளையும் உற்பத்தி செய்ய முடியும்.

குறித்த மீன் தொட்டிகளை மீண்டும் உருவாக்குவதில் பிரதேச மக்கள் காண்பித்த அக்கறையைப் பாராட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த திட்டத்திற்கான முழுமையான திட்ட வரைபினை தயாரித்து சமர்ப்பிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *