எமது மக்களின் கல்வி மேம்பாட்டுக்கும் குறிப்பாக இந்த பாடசாலையின் வளர்ச்சிக்குமாக இந்த பாடசாலை சமூகத்தினரால் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் நான் பக்கபலமாக இருந்து அவற்கு செயலுருவம் கொடுக்க தயாராகவே இருக்கின்றேன் என கடற்றொழில் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவிற்காக புதிதாக அமைக்கப்பட்ட குறித்த புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் விழாவின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டிடத் தொகுதியை சம்பிரதாய பூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்றிருந்த எமது நாட்டில் இன்று அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளபோதிலும் துரதிஸ்டவசமாக எமது மக்கள், எமது சமூகம் அதற்காக அதிகளவான விலையையும் கொடுக்க வேண்டியிருந்தது. இதற்கு தவறானவர்களின் வழிநடத்தல்களே காரணமாகவும் இருந்துள்ளது.
சமீபத்தில் கூட எமது மக்களின் அழிவுக்கு துணைபோனவர்கள் அந்த அழிவுக்கு பங்குதாரர்களாக இருந்தவர்கக்கு விழா எடுத்துள்ளார்கள் என்று சொல்லப்படுகின்றது. இது உண்மையில் ஒரு சுயநல அரசியலாகவே இருக்கின்றது.
ஆனால் அந்த விழாவை முன்நின்று செய்தவர்களின் தமது தலைவர்களை அல்லது முக்கியஸ்தர்களை கொலை செய்தவர்களுக்கே அல்லது அதை வழிநடத்தியவர்களுக்கே விழா எடுத்துள்ளார்கள் என்பதை அறியாதவர்களாகவே இதை முன்னெடுத்திருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்லாத தமது சுயநலன்களுக்காக மக்களை மீண்டும் உசுப்பெற்றுவதற்காகவும் அரசியல் இருப்பமை தக்கவைப்பதற்காகவுமே அதை அவர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.
ஆனால் அத்தகையவர்களின் முகத்திரைகள் இன்று மக்களின் முன் வெளிப்பட்டுள்ளது. மக்களும் விழிப்படைந்து விட்டார்கள்.
ஆகவே இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்களின் சுயநல போலி வேசங்களுக்கு மக்கள் எடுபடமாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment