தனது மனைவியின் வீட்டிற்கு தீ வைத்தவர்களை இனம் கண்டு தண்டனை வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
இலங்கையில் போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சி மறுசீரமைப்பு கூட்டங்களில் கலந்துகொள்வதுடன், வெலிமடை நுகதலாவையில் இன்று நடைபெற்ற செயற்றிட்டத்திலும் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வை பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோதும் , கூட்டத்தின் பின்னர் நாமல் ராஜபக்ஸ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம்
இதன்போது, அவரிடம் போராட்டக்காரர்களுக்காக புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்க்ஷ, அவ்வாறானதொரு யோசனை அரசாங்க தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை.
போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அவர்களை சிறையில் அடைத்து , தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றையேனும் பெற்றுக்கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும்.
எனது மனைவியின் வீட்டிற்கும் தீ வைத்தனர். எனது வீட்டிற்கும் தீ வைத்தனர். இதனை வழிநடத்தியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
எனினும், வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கும்போது, அதற்கு ஆதரவு வழங்கிய இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தடுத்து வைப்பதும் பயனற்றது.
எனவே வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும். போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்களை ஏதேனுமொரு வேலைத்திட்டத்தின் மூலம் சமூயமயப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment