கோப்பாய் பிரதேச சபை தவிசாளரை மாற்றுமாறு விடுத்த கோரிக்கையினை செயற்படுத்த தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா தவறிவிட்டதால் கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையில் தலைவர் காணப்படுவதால் தமிழரசு கட்சியின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (09.10.2022) கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் முன்பே கோப்பாய் தொகுதி சம்பந்தமான விடயங்களை கட்சி தலைமை பீடத்திற்கு பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்.
சீர்த்திருத்தங்கள் தொடர்பில் கடிதம்
அதேவேளை கட்சியிலும் பல சீர்த்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பில் நான் பல கோரிக்கைகளை முன் வைத்து கடிதங்கள் அனுப்பி இருந்தேன். அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு உரிய பதில்கள் எனக்கு கட்சி தலைமைப் பீடத்திலிருந்து அனுப்பப்படவில்லை.
அதேவேளை உரிய நடவடிக்கை எடுக்கப்படவும் இல்லை. மத்திய குழுவில் குறித்த விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டு குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூத்த துணை தலைவர் சி.வி.கே சிவஞானம், பொருளாளர் கனகசபாபதி, தலைவர் மாவை சேனாதிபதி ஆகியோர் தலைமையில் கோப்பாய் தொகுதி கிளை செயற்குழுவுடன் கலந்தாலோசிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய வீட்டில் கோப்பாய் தொகுதி கிளை செயற்குழு கூட்டப்பட்டது.
இந்த குழுவின் ஏகோபித்த முடிவின் படி ஏற்கனவே காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒப்பந்தத்தின்படி ரெலோ கட்சியை சேர்ந்த கோப்பாய் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளரை மாற்றுமாறு நாங்கள் கோரியிருந்தோம்.
தவிசாளர் மாற்றப்பட கோரிக்கை
ஒப்பந்தத்தின்படி அவர் 2020 ஆம் ஆண்டே மாற்றவேண்டி இருந்தது. குறித்த ஒப்பந்தத்தில் தவிசாளரை மாற்றுதல் தொடர்பில் நான் நீண்ட காலமாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதங்கள் அனுப்பி இருந்தேன்.
அந்த கடிதங்களின் அடிப்படையில் கோப்பாய் தொகுதி கிளை செயற்குழுவும் கோப்பாய் பிரதேச சபை தவிசாளரை மாற்றுமாறு கோரியிருந்தது. இதனை செயற்படுத்த தமிழரசு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மாவை சேனாதிராஜா தவறிவிட்டார்.
அதன் அடிப்படையில் கட்சியினை வினைத்திறனாக கொண்டு செல்ல முடியாத ஒரு இயலாமையான நிலையில் தலைவர் காணப்படுகின்றார்.
அதனடிப்படையிலும் தமிழரசு கட்சியின் உபகுழுக்கள் மத்திய செயற்குழு கோப்பாய் தொகுதி கிளை குழுவின் இணைத்தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து நான் விலகுவதாக கட்சித் தலைவர் மாவை சேனா ராஜாவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி கட்சியின் சகல பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
Be First to Comment