பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டும். எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்களும் இடம்பெறுகின்றன என்று ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளரும் பாராமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இன்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை, போராட்டக்காரர்கள் தொடர்பில்தான் விமர்சனம் உள்ளது. சிலர் உண்மையாகவே முறைமை மாற்றத்துக்காக போராடினர். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர்.
அன்று எம்மை கள்ளன் என்றனர். போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சட்டப்பூர்வமாக அவற்றில் இருந்து நாம் விடுதலை பெற்றோம். ஆனால் இன்றும் அரசியல் இருப்புக்காக சேறுபூசும் பிரச்சாரத்தை அவர்கள் கைவிடவில்லை. ‘கள்ளன்’, ‘கள்ளன்’ என்றும் கோ ஹோம் என்றும் குரல் எழுப்புகின்றனர். இவ்வாறு கூக்குரல் எழுப்புவதைவிட சட்ட நடவடிக்கை எடுப்பது மேலானது.
அரசியல் கட்சி என்ற முறையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் ஒருபோதும் பின்நிற்கபோவதில்லை . இந்த நாட்டில் இளைஞர்களுக்கு என ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. அவற்றை அடையாளம்கண்டு கொண்டு நாம் முன்னோக்கி பயணிப்போம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியாக மிகக் குறுகிய காலத்தில் நாம் மக்களது மனதை வென்றோம்.எமது மக்கள் காரணமாகவே எமது கட்சி பல்வேறு வெற்றிகளைப் பெற்றது.
கிராமங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மஹிந்த ராஜபக்ஷ முன்னின்று செயற்பட்டார். கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தினார். வீதிகள் புனரமைக்கப்பட்டன. நூற்றுக்கு நூறு சதவீதம் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
1986ஆம் ஆண்டிலேயே முதன் முதலாக அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் அதனை யதாரத்தமாக்கியவர் மஹிந்த ராஜபக்ஷ.
அரசியல் கட்சிகள் நகரங்களை அடிப்படையாக வைத்தே செயற்பட்டன. எனினும் நாம் கிராமங்களை அபிவிருத்தி செய்துகொண்டு நகரங்களையும் அபிவிருத்தி செய்தோம்.
கொரோனா தொற்றுப் பரவலால் உலக நாடுகளே பாரிய சவாலை சந்தித்தன. எமது தேசிய பொருளாதாரத்தை புதுபிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டோம். ஒவ்வொரு பிரிவுகளுக்கும் 40 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தோம். கிராமத்தின் உற்பத்திகளை விற்பனை செய்துகொள்வதற்காக கிராமங்களில் மத்திய நிலையங்களை அமைத்தோம்.
விவசாயிகளை பலப்படுத்துவதற்கு முயற்சித்தோம்.
எனினும் இவற்றை புரிந்துகொள்ளாதவர்களும் இருக்கவே செய்கின்றனர். இளைஞர்களுக்கு முறைமை மாற்றம் தேவைப்பட்டது.
நாம் தவறிழைத்திருந்தால் எம்மை தண்டியுங்கள். எம்மை திருடர்கள் என்று கூறியவர்கள் கொழும்பில் உள்ள பெண்ணொருவருக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளனர். அவ்வாறு பணம் வழங்கியவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் எமது பெயர் மட்டுமே அதில் இல்லை.
Be First to Comment