பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும். எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்களும் இடம்பெறுகின்றன என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாமல் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
போராட்டம் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை. போராட்டக்காரர்கள் தொடர்பில் தான் விமர்சனம் உள்ளது. சிலர் உண்மையாகவே ‘சிஸ்டம் சேன்ஞ்சு’க்காக போராடினர். சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, போராட்டத்தையே தமதாக்கிக்கொண்டனர். இதனால் என்ன நடந்தது என்பது குறித்து உண்மையான போராட்டக்காரர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
அன்று எம்மை ‘கள்ளன்’ என்றனர். போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், சட்டப்பூர்வமாக அவற்றிலிருந்து நாம் விடுதலை பெற்றோம்.
ஆனால், இன்றும் அரசியல் இருப்புக்காக சேறு பூசும் பிரச்சாரத்தை அவர்கள் கைவிடவில்லை. ‘கள்ளன்’, ‘கள்ளன்’ என கோஷம் எழுப்புகின்றனர். இவ்வாறு கூக்குரல் எழுப்புவதை விட, சட்ட நடவடிக்கை எடுப்பதே மேலானது.
ராஜபக்ஷவிடம் கறுப்புப் பணம் உள்ளது என கூறியவர்கள், கொழும்பில் உள்ள அக்காவுக்கு பணம் கொடுத்துள்ளனர். அவரின் பட்டியலில் எம்மை விமர்சித்தவர்கள் உள்ளனர். சந்தர்ப்பவாத அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம். கொள்கை அடிப்படையிலான அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்குங்கள் என்றார்.
Be First to Comment