வவுனியா மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
நேற்று (02.05.23) வவுனியா மாநகரசபையின் வேப்பங்குளம் பகுதியில் உள்ள கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாநகர சபை சுகாதார தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக வேப்பங்குளத்தில் உள்ள மாநகர சபையின் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் சுகாதார தொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக அங்கு சென்று பார்வையிட்டேன். அங்கு பணியாற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி, இளைப்பாறும் அறை, மலசலகூடம், உணவு உண்பதற்கான இடம் என்பன இதுவரை வழங்கப்படவில்லலை.
உடனடி உதவி திட்டம்
இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி அவர்களுக்கான மலசல கூட்டத்தை சீர் செய்ய பணித்ததுடன், குடிநீர் வசதியும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊடாக பெற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்கள் சுத்தமாக உணவு அருந்தும் இடம், இளைப்பாறும் வசதி என்பன செய்து கொடுக்கப்பட்டதுடன் பாதுகாப்பு அங்கிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கழிவுகளை அகற்றி எமது சூழல் சுத்தமாக இருக்க உதவுகின்ற போதும், அவர்களது தேவைகள் குறித்து இதுவரை காலமும் கவனம் செலுத்தப்படவில்லை. அவர்கள் தமது தொழிலை செய்ய அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பயணத்தின் போது மாநகரசபை செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment