தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் கல்வியியற் கல்லூரியில் பயிற்சிபெற்ற 7800 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று (18) க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டார்.
அடுத்த ஆண்டு க.பொ. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் மொழி போன்ற ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற்று, 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த புலமைப்பரிசில் திட்டம் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து 2006 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் செயல்படுத்தி வருகிறது.
மேலும் இந்த உதவித்தொகை மகாத்மா காந்தியின் நினைவாக மகாத்மா காந்தி புலமைப்பரிசில் என பெயரிடப்பட்டுள்ளது.
Be First to Comment