பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கடந்த மாதம் 23ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.
இதன்போது சத்திரசிகிச்சைக்காக மயக்க மருந்தினை உட்செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதற்கமைய உட்செலுத்தப்பட்ட மயக்க மருந்து காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனை வைத்தியசாலையின் வைத்தியர்கள் உறுதிப்படுத்தியதாக குறித்த குழந்தையின் தந்தை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதன்படி சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும் இதனால் குழந்தை உயிரிழந்ததாகவும் குழந்தையின் தந்தை எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னதாக இரண்டு தடவைகள் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பெண்கள் மயக்கமடைவதற்காக வழங்கப்பட்ட மருந்தினால் உயிரிழந்துள்ளனர்.
மகப்பேற்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரும் மற்றுமொரு பெண்ணும் இவ்வாறு உயிரிழந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என அரச மருந்தாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment