ரயில் திணைக்கள ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12) பிற்பகல், கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள வீட்டினுள் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் மாத்தறை, பியகஹா பகுதியைச் சேர்ந்த 41 வயதானவர் என்பதுடன், அவர் ரயில்வே குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக ரயில் திணைக்கள ஊழியரை ஒருவர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுனாவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாக்குவாதத்தின் போது குறித்த நபர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment