இலங்கைக்கும் ஐவரி கோஸ்டுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்குமான 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அபிட்ஜானில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தூதுவர் கனநாதன் ஐவரி கோஸ்ட் குடியரசின் ஜனாதிபதி அலசேன் ஒட்டாராவுடன் சந்திப்பொன்றில் இடம்பெற்றது.இது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளில் சாதகமான முன்னேற்றம் எனவும், உறவுகளை வலுப்படுத்துவதற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறி எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.தூதுவர் கனநாதன் நாடுகளுக்கிடையிலான உறவின் முழுத் திறனையும் உணர்ந்து கொள்வதற்கு ஐவரி கோஸ்ட்டுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான இலங்கையின் ஆர்வத்தை இதன்போது மீண்டும் வலியுறுத்தினார்.பொருளாதார நிபுணரும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் அலுவலருமான ஜனாதிபதி ஒட்டாரா, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த நடவடிக்கைகளுக்கு தனதுபாராட்டைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது இருதரப்பு உறவுகள், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல், ஆபிரிக்க வளர்ச்சி மற்றும் வாய்ப்புச் சட்டம் (AGOA) மற்றும் ஐவரி கோஸ்ட்டில் வணிக தொழிற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான இலங்கை வர்த்தகர்களுக்கு ஆதரவளிக்கும் வர்த்தக வாய்ப்புகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.ஜனாதிபதி ஒட்டாரா AGOA இன் நன்மைகளை விசேடமாக குறிப்பிட்டதோடு AGOA இன் நன்மைகளை ஆராய்வதற்கு புடவை மற்றும் ஆடைத் துறைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை வர்த்தகர்களை அழைக்குமாறு தெரிவித்தார். AGOA ஆனது இலங்கை முயற்சியாண்மையாளர்களுக்கு ஐவரி கோஸ்ட்டில் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பை வழங்குவதோடு, இது அமெரிக்க சந்தையில் தங்கள் இருப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை வர்த்தகர்களுக்கு கணிசமான ஆற்றலை வழங்குவதன் ஊடாக, தீர்வை இன்றி ஆடைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பளிக்கின்றது.ஐவரி கோஸ்ட் ஆனது கொகோ பீன்ஸ், மூல மரமுந்திரிகை போன்றவற்றில் உலகின் முதன்மை ஏற்றுமதியாளராக இருப்பதோடு, குறிப்பிடத்தக்க எண்ணெய் ஏற்றுமதியாளராகவும் கணிசமான உற்பத்தித் துறையையும் கொண்டதாகவும் உள்ளது. ஐவரி கோஸ்ட் நாடானது மேற்கு ஆபிரிக்க பொருளாதார மற்றும் நாணய ஒன்றியத்தின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் உள்ளது.சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்காக ஜனாதிபதி ஒட்டாரா மற்றும் அவரது அரசாங்கத்திற்கு தூதுவர் கனநாதன் நன்றிகளை தெரிவித்தார்.24 ஆபிரிக்க நாடுகளின் பங்கேற்புடன், 2024 ஜனவரி 13 முதல்2024பெப்ரவரி 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளஆபிரிக்க நாடுகளின் கால்பந்து கிண்ணபோட்டி -2023 ஐவரி கோஸ்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment