யாழ். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 300 பவுண் தங்க நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த 2 வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்த போது இந்திக்க தலைமையிலான யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது சந்தேக நபரின் மனைவி அங்கிருந்து தப்பியோடினார். சந்தேக நபரிடமிருந்து 90 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், திருடிய நகைகளை விற்ற பணத்தில் சந்தேக நபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மூன்று பேரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பிரதான சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
Be First to Comment